விக்ரமாதித்யன் கவிதைகள்
கிளிகள்
குறிப்பிட்ட தூரம் தாண்டா
குயில்கள் பக்கத்துப் பக்கத்திலேயே
கூவிக்கொண்டிருக்கின்றன
ஆடும் மயில்கள்
அங்கிட்டு இங்கிட்டு போக வேண்டாதவை
புலிகளே கூட
காடுவிட்டு காடுசெல்ல நினையாதவை
காக்கைகளுக்கும் கழுகுகளுக்கும்
வரையறுக்கப்பெற்ற தொலைவுதான்
ஓடும் நதியென்றாலும்
மீன்களும் சிற்றெல்லைகளுக்குள்தாம்
மான்கள்
ஒருவகையில் பாவம்
பாம்புகள் புழுக்கள்
தத்தம் பகுதிக்குள்தாம்
உயர்திணையென
உயர்த்திச் சொல்லிவிட்டால் போதுமா
நதிக்கரை விட்டு
பட்டணக்கரை
நாடுவிட்டு
நாடு
கண்டம் தாண்டி
கண்டம்
மனுஷர்களுக்குத்தாம்
கொடுமையெல்லாம்
~
கவிஞர் விக்ரமாதித்யன்

Comments
Post a Comment