கூடடையாத சொல்

~
திரும்பிக் கூடடையாத
சொல்லின் அன்புக்காக
இரவு முழுக்கக் காத்திருந்துவிட்டுத்
தொண்டை வற்றிய
ஒரு ஞாயிற்றின் அதிகாலையில்
எடுத்து வீசினான்
மதுவீச்சம் கலந்த
இன்னும் சில சொற்களைத்
தன் அலைபேசித்திரை வழியே
சரியாக பத்து நொடிகளில்
திரும்பி வரத் துவங்கியது
இறகு இறகாய்
கவிஞன் சிரித்தான் ஊரைப்பார்த்து
ஊரும் சிரித்தது கவிஞனைப் பார்த்து
நீதியின் பீழைவழிகிற கண்களோடு
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த
ஞாயிறோ
யாருமறியா வண்ணம்
கழுத்தைப் பிடித்துக்
கழுவேற்றியது யாமத்தில்
இரண்டு சிரிப்பில்
ஒருவர் சிரிப்பை மட்டும்
ஏனோ
~
சேரவஞ்சி
Comments
Post a Comment